“முதல்வர் எடப்பாடி மத்திய பாஜ அரசிடம் கூனிக் குறுகி, எதிர்க்க தைரியம் இல்லாமல் நிற்கிறார்” – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்களித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வாங்க முடியாமல் முதல்வர் எடப்பாடி மத்திய பாஜ அரசிடம் கூனிக் குறுகி எதிர்க்க தைரியம் இல்லாமல் நிற்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த விருத்தாசலம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக தீர்மான குழு செயலாளருமான குழந்தை தமிழரசன் திருவுருவப் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒரு ஆட்சி இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும், முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். கொரோனாவில் மக்களை அல்லாட விட்டு விட்டு மாவட்டம் மாவட்டமாக கட்சிகாரர்களை சந்தித்து வருகிறார் முதல்வர். அவர் ஒரு மாவட்டத்திற்கு சென்று திரும்பிய பிறகு, அந்த மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றும் அதிகமாகிறது. அந்த நோயால் இறப்பும் அதிகரித்து விடுகிறது. இந்த லட்சணத்தில்தான் அவரது ஆட்சி இருக்கிறது.
அதிமுக ஆட்சி இன்று ஒரு மக்கள் விரோத ஆட்சி. மக்களின் உயிரை பறிக்கும் ஆட்சி. யார் எப்படிப் போனால் என்ன, கமிஷன் அடிப்பது மட்டுமே நமக்கு முதல் கடமை என்று செயல்படும் அமைச்சர்களையும், முதலமைச்சரையும் கொண்ட ஆட்சி. இன்றைக்கு நீட்’ அரக்கன், ஒவ்வொரு மாணவருடைய உயிராக பறித்துக் கொண்டிருக்கிறது. மதுரையில் ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி, நீட் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனும் அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
அரியலூர் அனிதா, விழுப்புரம் ப்ரதீபா, விழுப்புரம் மோனிஷா, திருப்பூர் ,தஞ்சாவூர் வைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபசி, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டை ஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் என நீட் தேர்வால் பலியான மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் முதல்வர் பழனிசாமியோ `நீட் தேர்வுக்கு’ விலக்களித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வாங்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசிடம் கூனிக் குறுகி நிற்கிறார். நீட் தேர்வு நடக்கப்போகிறது. நாடே எதிர்க்கிறது. ஆனால் முதல்வரோ, அதனை எதிர்க்க தைரியம் இல்லாமல் முதுகெலும்பை தொலைத்து விட்டு நிற்கிறார்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அவர், அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை கூடச் செயல்படுத்த முடியாமல், முதலமைச்சராக தவித்து நிற்கிறார். ஆகவே இந்த ஆட்சி மாணவ – மாணவிகளுக்கு விரோதமான ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள். என்றைக்குத் தேர்தல் வந்தாலும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுக் கூடப் போக முடியாது.
அந்த அளவிற்கு மக்களை துயரத்தில், பேரிடரில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பொல்லாத ஆட்சியை தூக்கியெறிந்து விட்டு திமுக ஆட்சியை அரியணையில் ஏற்ற, கலைஞரின் நினைவிடத்தில் அந்த வெற்றியை காணிக்கையாக்க நாமெல்லாம் ஒருங்கிணைவோம், வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.