பெங்களூர், புலிகேசி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் தங்கை மகனான நவீன் என்பவர், சமூக வலைதளத்தில் ஒருசாராரின் மதம் தொடர்பான சர்ச்சை கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அவரின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல், கற்களை வீசி தாக்கியும், வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்தும் சேதப்படுத்தியது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரும், அவரது உறவினர் மகன் நவீனும் கேஜிஹள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து, போராட்டகுழுவினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சை கருத்தை பதிவிட்ட நவீன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே அங்கு திரண்ட கும்பல், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். போலீசாரின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்தது இருக்ககூடும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததால், அப்பகுதியில் அசாம்பாவித சம்பவங்களை தடுக்கும்வகையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
