ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொண்ட CSK கேப்டன் தல தோணி!!

ஐபிஎல்2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடருக்காக வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு செல்லும் முன் வீரர்கள் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் மகேந்திர சிங் தோனியும் வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக புதன்கிழமை (நேற்று) கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது சோதனை அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஞ்சியில் உள்ள தனியார் குரு நானக் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பிராக்சிஸ் ஆய்வகம் புதன்கிழமை, சிமாலியாவில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் இருந்து அவரது ரத்த மாதிரியை எடுத்தது. தோனியைத் தவிர, மற்றொரு சிஎஸ்கே வீரர் மோனு குமார் சிங்கும் தனது ரத்த மாதிரிகளை வழங்கினார். இரு வீரர்களின் கரோனா சோதனை அறிக்கை வியாழக்கிழமை பிற்பகலுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குரு நானக் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த அறிக்கைகளில் கொரோனா இல்லை என்று வந்தால் தான் இரு வீரர்களும் சென்னைக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு சிஎஸ்கே அணி நிர்வாகும் ஐபிஎல் தொடருக்காக ஐந்து நாள் முகாமை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
“தோனி ஐபிஎல் 2020 மற்றும் 2021 தொடரில் நிச்சயம் விளையாடுவார். அதுமட்டுமல்ல 2022 ஆம் ஆண்டிலும் விளையாடுவார். அவர் ஜார்க்கண்டில் பயிற்சி பெற்று வருவதாகக் ஊடகங்கள் மூலமாக மட்டுமே செய்திகளை பெறுகிறேன். ஆனால் அவரை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் தனது பொறுப்புகளை அறிவார், அவர் தன்னையும் அணியையும் கவனித்துக்கொள்வார்” என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.