டில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ஒரு கோடி ரூபாய் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை !!

டில்லியில் அரசு உத்தரவை மீறி காற்றுமாசு ஏற்படுத்தினால், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
டில்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‛அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு அதிகமாகிறதா என்பது குறித்து, சிறந்த முறையில் கண்காணித்து கட்டுப்படுத்த விரிவான சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது,’ என தெரிவித்தார்.
இந்நிலையில், டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.