தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000- க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இயக்குநரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவருமான பாரதிராஜா, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் அனைத்தும் வெளியாகும் என 51 தயாரிப்பாளர்கள் சார்பாக தெரிவித்துள்ளார்.
அதில், “QUBE, UFO கட்டணங்களை இனி செலுத்த முடியாது. திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் எனவும், BOOK MY SHOW, TICKET NEW போன்ற ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தரவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களின் இந்த கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் அனைத்தும் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.