“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும்” – முதலமைச்சர் நாராயணசாமி

தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமைகளாக இருந்துவருகின்றனர். குறிப்பாக, பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு இந்திய அளவில் ஏராளமான இளைஞர்கள் அடிமைகளாக இருந்துவந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
அதேபோல ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் பலரும் அடிமையாக இருந்துவருகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் திருமணமானவர்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த விளையாட்டினால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்றன. அதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவந்தன.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் விஜயகுமார் என்ற நபர் அண்மையில் ஆன்லைன் ரம்மி விலையாட்டில் 40 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததுடன், தற்கொலையும் செய்துகொண்டார். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மாநில அரசின் கீழ் வராதததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மத்திய அரசு தான் தடைவிதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் ரம்மி விளையாட்டில் வென்றதாக வரும் விளம்பரத்தையும் தடைசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்