அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே… தோப்புக்கரணம் போட்டு வழிபட்ட முதல்வர்

விநாயகர் சதுர்த்தியை கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு வீட்டிலேயே கொண்டாட வலியுறுத்திய முதல்வர் பழனிசாமி, தன்னுடைய சேலம் வீட்டில் களிமண் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தினார்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மும்பையில் இது பிரம்மாண்டமாக நடைபெறும். அங்கு கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் விழா கமிட்டியினரே தாமாக முன் வந்து பொது இடங்களில் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் துளிர்விட நினைக்கும் ஒரு கட்சி பொது இடங்களில் சிலை வைக்க தடை விதித்ததை அரசியலாக்கி வருகிறது. அதிமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என அதன் மாவட்ட, மாநில தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான் முதல்வர் பழனிசாமி தன்னுடைய சேலம் சூரமங்கலம் வீட்டில் குடும்பத்தினருடன் விநாயகர் வழிபாடு நடத்தியதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். குடும்பத்தினருடன், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று தோப்புக்கரணம் போட்டு வழிபட்டார்.