மும்பையில் கடந்த 15 வருடங்களில் இல்லாத கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் !!!

மும்பையில் 15 வருடங்களில் இல்லாத அளவு பெய்த கனமழையால் மும்பை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 21 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசி வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் மும்பை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் உள்ளே புகுந்ததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் சுமார் 300 முன்களப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்றும் பைகுலா என்ற பகுதியில் மழைநீரில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ரப்பர் படகுகள் மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, மத்திய அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.