கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த முதல்வர்!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைத் தடுக்கும் பொருட்டு மாநிலத்தில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 8,135 பேர் கொரோனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 72,339 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, நேற்று நள்ளிரவு மாநில தலைமைச் செயலாளர் மாநிலம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
இதுதொடர்பாக மாநிலத் தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பிறப்பித்த உத்தரவில், “மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகமாகக் கூடுவது, கூட்டமாகச் சேர்வது போன்றவை இன்னும் பரவலை வேகப்படுத்தும். ஆதலால், 5 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 3-ம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சூழலை ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கேரளாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி 1.50 லட்சத்தையும், நேற்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.