விடுதலைக்கு முன் கட்டம் கட்டப்படும் சசிகலா – ரூபாய் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்டு உள்ள நிலையில் அவரது 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் 2017இல் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மறைந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவர் விடுதலை ஆவார் என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தான் அவர் விடுதலை ஆவார் என சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூபாய் 1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை கூறியிருந்தது.
இந்த நிலையில் தற்போது சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மேலும் ரூபாய் 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினாமி தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.