சத்துணவு மாணவர்களுக்கு மாதத்திற்கு தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

அரசு பள்ளியில் சத்துணவு பெரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதத்திற்கு தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எவ்வித முடிவும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இதற்கிடையில் கொரோனா பரவி வரும் சூழல் என்பதால், மாணவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் சத்துணவு சாப்பிடுவோரைக் கணக்கிட்டால் 50 லட்சம் மாணவ, மாணவியர் உள்ளனர். மேலும், அங்கன்வாடியில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் முட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை பெற்றோர் வசம் பள்ளிகள் மூலமாகவோ அல்லது நியாயவிலைக் கடைகள் மூலமாகவோ விநியோகிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசானது அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன் முட்டைகளும் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.