திருட்டு பைக்குகளும், ஏரோனாட்டிகள் எஞ்சினியரும்..!

சென்னையில் புல்லட் வாகனங்களை மட்டுமே குறிவைத்து வாட்ஸ் அப் குழு அமைத்து திருடி வந்த 9 பேர் கொண்ட கும்பலை, கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 29 புல்லட் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருடப்பட்ட வாகனத்தில் உள்ள பொருட்களை உதிரிபாகங்களாகவும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உதிரிபாகங்கள் கோட்டூர்புரம் பகுதியை சார்ந்த சோகன் குமார் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சோகன்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் பொறியியல் படித்துவிட்டு, கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றை சோகன் குமார் நடத்தி வந்துள்ளார். பின்னர் தான் செய்த புராஜக்டுகளை விளம்பரம் செய்து, தனியார் நிறுவனத்தின் மூலமாக பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு பல பிராஜக்ட்களையும் செய்து கொடுத்துள்ளார்.
மேலும், சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி, டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு திருட்டு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி சிறிய ரக கார், ஹெலிகாப்டர் போன்ற பல பொருட்களை செய்து கொடுத்துள்ளார். இதனைத் தவிர்த்து திருடிய நகைகளை வைத்து இரும்புத்திரை படத்தில் இருசக்கர வாகனத்தையும் வடிவமைத்து கொடுத்துள்ளார்.
இதனைப்போன்று ஆந்திர பிரதேசம் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் நடைபெற்று வரும் பைக் ரேஸுக்கு வித விதமான பைக்குகளை வடிவமைத்துக் கொடுத்து வந்துள்ளார். ஹைதராபாத், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குறைந்த விலைக்கு பைக்குகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது வரை 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.