ஒரே ஒரு பிரேக் தான்… கண்ணாடியை உடைத்துக் கொண்டு பறந்து விழுந்த நடத்துனர்…!

திடீரென பிரேக் போட்டதால், கண்ணாடியை உடைத்துக்கொண்டு நடத்துனர் சாலையில் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள ஆவடி காமராஜர் சாலை பகுதியில், சென்னை மாநகர சிற்றுந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
முன்புறம் இருந்து பயண சீட்டுகளை பேருந்தின் நடத்துனர் கொடுத்து கொண்டிருந்தார். இந்த நிலையில், சாலையின் குறுக்கே சிறுமியொருவர் திடீரென வந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென நிறுத்தப்பட்டதால், பேருந்தின் உள்ளே இருந்த நடத்துனர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்துள்ளார். கனப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், நடத்துனர் நிலைகுலைந்து விழுந்துள்ளார்.
நல்ல வேலையாக சிறிய அளவிலான காயத்துடன் நடத்துனர் தப்பித்த நிலையில், பேருந்தின் முன்புற கண்ணாடி பகுதியளவு சேதமடைந்தது. காயமடைந்த நடத்துனர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.